Showing posts with label மவுனம். Show all posts
Showing posts with label மவுனம். Show all posts

Wednesday, 24 November 2010

மவுனம்

மவுனம்…

பல நேரங்களில் மவுனமாக இருப்பது கடினமே. மவுனத்தைக் கலைத்து உங்களை கோபமூட்டிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஒருசிலர் செயல்படுவார்கள்.

அதிலும், இன்றைய அதிவேக தகவல் தொழில்நுட்ப உலகில் கணினி புரோகிராம் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, `கன்னிங்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தத்தைக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஐ.டி. உலகில் அவரவர் திறமையைக் கொண்டு முன்னுக்கு வருவோம் என்று நினைப்பவர்களை விடவும், அரசியல் பண்ணி, மேலதிகாரிகளை போட்டுக் கொடுத்து, எப்படியாவது அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என செயல்படுபவர்களே அதிகம். அதில் சிலர் வெற்றி பெறுவதும் உண்டு. ஆனால் அந்த வெற்றி நிலையானதாக இருக்காது.

மவுனத்திற்கும், மனோதத்துவத்திற்கும் தொடர்புகள் அதிகம். பெரும்பாலான நேரத்திற்கு மவுனமாக இருந்தாலும் மனோவியாதி உள்ளவர்களாகக் கருதி மற்றவர்கள் ஒதுக்கி விட நேரிடும்.

ஆனால், மவுனத்தால் பல விஷயங்களைச் சாதித்தவர்களும் உண்டு. மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பது பழமொழி. அதுவே எதிர்ப்புக்கும் அடையாளமாகக் கொள்ளலாம்.

ஒருவர் கூறும் விஷயம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றால், அதனை ஆமோதிக்காமல் மவுனமாகச் சென்று விடுவோரும் உண்டு. இதனால், அந்தக் கருத்துகளை சம்பந்தப்பட்டவர் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமல்ல.

மவுனமும், ஆன்மீகமும் மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. ஆன்மீகத்தின் ஒரு அடையாளமான தியானம் செய்வதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்துகிறோம்.

பரபரப்பு நிறைந்த இன்றைய உலகில் அவ்வப்போது, ஒருநாள் மவுன விரதத்தை கடைபிடிப்போரையும் காண்கிறோம். இதனால், மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு மருத்துவ அடிப்படையிலும் உடல் உறுப்புகளும் புத்துணர்ச்சியைப் பெறுகின்றன.

என்றாலும், எல்லா நேரங்களிலும் மவுனத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. தேவைப்படும் நேரத்தில், தேவையானவற்றை தெளிவாகவும், உறுதியாகவும் பேசுவது அவசியமாகிறது.

அதிக ஒலியுடன், ஆவேசமாகப் பேசுவதால் உடலின் சக்தி வீணாவதுடன், அப்படி பேசுபவர்கள் மீதான மற்றவர்களின் பார்வையும் தவறானதாக நேரிடும். எனவே அளவுடன் – தேவையானவற்றைப் பேசி நல்ல மனோநிலையை அடைவோம்.

மவுனமொழி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.